Friday, 20 December 2024

தேர்ந்தெடுக்க ஒரு சொர்க்கம் அல்லது நரகம். பெரு.முருகன்

தேர்ந்தெடுக்க ஒரு சொர்க்கம் அல்லது நரகம்.
பெரு.முருகன்.


[இது ஒரு நீண்ட கட்டுரை. நகைச்சுவை கலந்து எழுதப்பட்ட இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. மாறாக முக்கியமான மதங்களின் சொர்க்கம் நரகம் சம்பந்தப்பட்ட விவரங்களை என்பாணியில் எழுதியிருக்கிறேன்]


மனிதனாவன் இறந்து போய்விட்ட பிறகு தான் அல்லது தன் ஆத்மா என்ன நிலையில் இருக்கும் என்பதை நினைந்து கவலைப்பட்டு படைத்ததே சொர்க்கம், நரகம். தனக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது தான் விரும்பிய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் இறந்த பின் சொர்க்கம் செல்வர், மற்றும் எதிரணியில் இருப்பவர்கள் நரகம் செல்வாரென எழுதி வைத்து இருக்கின்றனர். எழுதி வைத்தவர்கள் எல்லாம் சமுதாயத்தில் வல்லவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பது அவரவர் அவர்களைப் புரிந்துகொள்ளும் போக்கு.

ஆக மனிதர்கள் பயத்திலேயே வாழ்கின்றனர். பயம்கூட வாழ்வின் முக்கியப்பகுதி. ஆம் அப்படித்தான் சமுதாயம் மனிதர்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றது. ஆனால் பலர் பயமே வாழ்க்கையாக வாழ்ந்தும் கழித்து விடுகின்றனர். எப்படியோ போகட்டும்!!! நாம் வந்த வேலையைப் பார்க்கலாம்!! முதலில் இந்நாட்டின் பெரும்பான்மை மதமாக இருப்பதினாலும், சொர்க்கம் நரகம் பற்றி ஏராளமான விவரணைகள் இருப்பதினாலும் ஆரியமதம் என்று சொல்லப்படுகின்ற இந்துமதத்தை பற்றி முதலாவது விவரணை.


சொர்க்கலோகம்/தேவலோகம்.

சொர்க்கலோகம் அல்லது தேவலோகம் வானத்தில் அல்லது ஆகாயத்தில் நிலவுக்குக் கீழே எங்கோயோ ஓரிடத்தில் இருக்கின்றது.அதாவது நிலவுக்குக் கீழாகத் தொண்ணூறு இலட்சம் யோசனை தூரமாம். தேவலோக அதிபதி இந்திரன் தான் இதற்குத் தலைவர், இவர் ஒருவரே அல்லர், இடம், பொருள், காலம், இடப்படும் சாபம் முதலியவற்றுக்கு ஏற்றாற்போல் அவர் மாறிக்கொண்டே இருப்பார், ஆனால் இந்திராணி என்பவர் ஒருவரேதான்! என்ன இந்திராணி ஒருவர்தானா, ஆனால் இந்திரர்கள் பலபேரா எனச் சந்தேகம் இயல்பாக எழுகிறது அன்றோ? ஆமாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, சொர்க்க நரகங்களைப் பற்றி விவரிக்கும் கருடபுராணத்தில் இவ்வாறுதான் எழுதப்பட்டுள்ளது. 

இதற்கொரு உதாரணம் வேண்டுமானால், கேரளாவில் சில குறிப்பிட்ட ஜாதிகளிலே தாய்வழி சமூகம் நிலவி வந்தது. அதைச்சார்ந்த பெண்களுக்கு ஏராளமான கணவர்கள் இருந்தனர். சில பெண்களுக்கு அதீதமான அழகும் ஆண்களைத் தாங்கிக்கொள்ளும் திறனும் இருந்தால் அவளுக்கு அதிகமான கணவர்கள் வாய்க்கும். ம்ஹூம் ஒரு பெண்ணுக்கு அதிகப்பட்சமாகப் பதினைந்து கணவர்கள் இருந்தனராம்.

அவர்கள் கொடுத்து வைத்தவர்கள், சண்டைப்பிடிக்க ஒரு கணவன் மட்டும் போதாது, ஒன்பது கணவர்கள் வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஏற்பாடு ஒரு வரப்பிரசாதம்! போகட்டும். நாம் வந்த வேலையைப் பார்க்கலாம்.


எண்ணூறு கோடி மக்கள்த்தொகை இருக்கும் இவ்வுலகில் வாழும் அனைவருமே புண்ணியமும் தர்மகாரியமும் செய்து சொர்க்கத்திற்கு செல்கிறார் எனக்கொள்வோம், அப்போது அத்துணை மனிதருக்கும் அங்கே இடம் இருக்குமா என்று கேட்டால், இடமிருக்கும் என்றுத்தான் தோன்றுகிறது. சரி அங்கே போகும்போது பார்த்துக்கொள்ளலாம்!

இப்போது அதாவது சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்துமதம் என்று பெயரிடப்பட்டிருக்கும் சைவ வைணவ உள்ளடக்கிய வேதம் முதல் சாதாரண உள்ளூர் தெய்வங்கள்வரை கொண்டிருக்கும் இந்துமதம், ஜைனமதம், பெளத்தமதம், கிறிஸ்துவ இஸ்லாமிய மற்றும் யூத மதங்கள் எனப் பல மதங்கள் இன்றைய தினத்தில் உலகில் இருந்தாலும், இந்துமதத்தில் சொல்லப்பட்டுள்ள சொர்க்க நரக கதைகளுக்கு இணையாக வேறெந்த மதத்திலும் இல்லை, எனவே இதில் இந்து மதத்திற்கே முதலிடம்! 











   








No comments:

Post a Comment