Monday, 22 July 2019

மர்ம மூலிகைகள். வழிமறிச்சான் பூண்டு

மர்மமான மூலிகைகள்.

[1] வழிமறிச்சான் பூண்டு.

முதன்முதலாக காசிபிச்சை என்ற சித்தமருத்துவரின் நூலில் இந்த மூலிகையை பற்றிய தகவலை பார்த்தேன். அடுத்து எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைத்தொகுதி ஒன்றை படித்துக்கொண்டிருக்கும் போதும் இதுபற்றிய தகவலைப் பார்த்தேன். அதில் இந்த மூலிகையின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. மாறாக கன்னியாகுமரியில் மரம்செடிகொடிகள் அடர்ந்திருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் நுழைந்த அவரின் தோழன் என்ன கதிக்கு உள்ளானான் என்று அவர் அக்கட்டுரை தொகுதியில் குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது அந்த குறிப்பிட்ட பகுதிக்கு போன அந்த நபர் ஏதோவொன்றினால் தாக்கப்பட்டதாக நினைந்து அங்கேயே அடிப்பட்ட கட்டெறும்பு கணக்காக ஒரே இடத்தில் நினைவுதப்பி சுற்றிசுற்றி வந்து கொண்டிருக்கிறார். பிற்பாடு மீண்டு விட்டிருக்கிறார்.

இதுபற்றி முகநூலில் நான் இடுகையிட்டபோது நண்பர் ஒருவர் அதன்பெயர் திகைப்பூண்டு என்று சொல்லியிருந்தார். வேறொரு நண்பர் சன் கண்ணன் என்பவர், அது கொடைக்கானலில் மதிமயக்கிய வனம் என்ற பகுதியில் இருப்பதாகவும் மனிதர்கள் போவதற்கு அந்த இடம் தடைச்செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இப்போது மற்றொரு நண்பர் அதன் புகைப்படத்தை போட்டிருக்கிறார். மேலே கண்டதுதான் அப்புகைப்படம். ஒருவேளை அதில் நுண்ணிய முட்கள் இருக்கக்கூடும். பாதத்தில் அம்முட்கள் தைத்து மூளைக்குள் விஷமேறி பாதிக்கப்பட்ட நபரின் நினைவுகளை குழப்பிவிடக்கூடும். அல்லது அதன் மணமே இந்த வேலையை செய்யக்கூடும்.

எதுவாக இருந்தாலும் நான் நேரில் பார்த்து இதன் குணத்தை அறிந்தேனில்லை. மற்றும்  ஒருநாள் இல்லை ஒருநாள் இதை நேரில் நான் பார்க்கக்கூடும், அப்போது இதன் குணத்தை காணக்கூடும்.

பெரு.முருகன்.  

No comments:

Post a Comment